RSS

தரிசனம் எப்போது ?



மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடிட
இன்பத்தில் நாம்
கைகொட்டி ஆர்ப்பரிக்க
எம்மோடு கைகோர்த்து
முகம் மலர்ந்தவன் நீ !


விழிகளில் நீர் திரையிட
வாழ்வே அர்த்தமற்று
விளங்கும் அவ்வேளைதனிலே
மண்ணில் விழும் கண்ணீரின்
முறையீடுகளை பொறுமையாய்
செவிமடுப்பவன் நீ !


தெரியாமல் நாம் இழைத்த
தவறுதனைப் பொறுத்தருளி
திருந்தும் வாய்ப்பளித்து
என்றுமே எம்மை நல்வழிப்படுத்தியவன் நீ !


தெரிந்தே செய்த தவறுதனை
உணர்ந்து
மன்னிப்புக் கோரியபோது
நிந்தன் புன்சிரிப்பினையே
பதிலாகத் தந்தருளியவன் நீ !


உன்னிடம் என் காரியம்
ஆகவேண்டுமெனில்
உன்னைக் குளிர்விக்கும் வழியறிந்து
அதை அமுலாக்கிய போது
கோபித்துக் கொள்ளாதவன் நீ !


கற்றவை மனதில் பதியாமல்
மற்றவையும் விளங்கிடாமல் போகவே
செய்வதறியாது விழித்து
உன்னைத் திட்டிய போது
அவற்றை அன்புடனே
ஏற்றுக்கொண்டவன் நீ !


வாழ்வுதனில் போராடிக் களைத்து
உன்னை நம்புவதற்கில்லையென
மனம் அரற்றிய பக்தர்களுக்கு
அன்பு மார்க்கம் காட்டி
வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிசமைத்தவன் நீ !


பிறப்பும் இறப்பும்
உந்தன் படைப்பினிலே
பொய்த்துப் போகவே, இடையே
மனிதன் தாம் வாழ்ந்திட்ட வாழ்வுதனை
அர்த்தமுள்ளதாக்குபவன் நீ !


இத்தனையுமாய் இருந்திட்ட
உன்னை, என்றும் மறவேன் - இறைவா
மழலை தன் பாவைதனை
யாரிடமும் கொடாமல் தன்னிடமே
வைத்துக்கொள்வதைப் போல
நானும் என் இதய அறையில்
பத்திரப்படுத்துகின்றேன்
உன் நினைவின் பெருமிதங்களை !


எனினும் நெஞ்சின் ஓரத்தில்
ஒர் சிறுதவிப்பு .....
சிலையாக இருந்து சிந்தனைகளை
சீர்திருத்தும் நீ,
நிஜங்களின் நாயகனாக
தரிசனம் தருவது எப்போது ?

2 comments:

Think Why Not said...

வெளிப்படையாய் தோன்றாமலே எல்லாம் செய்யும் இறைவன் போல வெளியிட்டு கூறாமலே இறைவனை தாயாய் தந்தையாய் குருவாய் நண்பனாய் உவமித்த விதம் அழகு....

Unknown said...

தங்களின் பின்னூட்டல் என் அடுத்தடுத்த இடுகைகளுக்கு மேலும் ஊக்கம் தருவதாய் உள்ளது !
நன்றி Thinks Why Not-Wonders How :)

Post a Comment